செய்திகள்
புதுச்சேரி

14 பேருக்கு கொரோனா- புதுவை சிவப்பு மண்டலமாக மாறுகிறது

Published On 2020-05-22 15:22 IST   |   Update On 2020-05-22 15:22:00 IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தால் ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் புதுவை சிவப்பு மண்டலமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ தொடங்கியபோது புதுவை மாநிலத்தில் மாகி மண்டலத்தில் ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டார்.

பின்னர் படிப்படியாக புதுவையிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய அரியாங்குப்பம் மற்றும் திருபுவனை பகுதியை சேர்ந்த 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அவர்களுடன் தொடர்புடைய ஓரிருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருந்ததால் அவர்கள் அனைவரும் புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே புதுவையை யொட்டி அமைந்துள்ள தமிழக பகுதியான கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறாக கடந்த 50 நாட்களில் புதுவை மற்றும் காரைக்கால், மாகி பகுதியில் 9 பேரும், கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் என மொத்தமே 15 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுவை இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதில், புதுவையை சேர்ந்தவர்கள் முழுமையாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனால் ஆரஞ்சு மண்டலமாக இருந்த புதுவை பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த வகையில் திருபுவனை அருகே க.குச்சிப் பாளையத்தை சேர்ந்த ஒருவரும், திருபுவனை செல்லிப்பட்டை சேர்ந்த மற்றொருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுவை இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அரும்பார்த்த புரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மற்றும் அவரது மனைவி, குழந்தை மற்றும் பண்ட சோழநல்லூரை சேர்ந்த மற்றொருவர் என படிப்படியாக புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் கூடிக்கொண்டே வந்தது.

நேற்று மட்டும் புதுவையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

புதுவை குரும்பாபேட்டு பகுதியை சேர்ந்த மளிகை கடை வியாபாரியின் மகன் மற்றும் துபாயில் இருந்து புதுவை திரும்பிய லாஸ்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் புதுவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 ஆனால் ஆரஞ்சு மண்டலமாக இருந்த புதுவை சிவப்பு மண்டலமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News