லாஸ்பேட்டையில் பொதுப்பணித்துறை ஊழியர் உள்பட 3 பேரை தாக்கி கொலை மிரட்டல்
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் மெயின் ரோடு பாரதி நகரை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் பொதுப்பணித்துறையில் தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு இவர் இடையன்சாவடி ரோட்டில் குமாரின் நண்பர்களான இடையன்சாவடியை சேர்ந்த வசந்தகுமார், அகிலன், புண்ணியகோடி ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது கருவடிக்குப்பத்தை சேர்ந்த சரவணன் (வயது 36), விக்கி (27), பாலா (27) மற்றும் சாரதி (20) ஆகியோருடன் அங்கு வந்தனர்.
அவர்கள் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் சரமாரியாக தாக்கினர். மேலும் இதனை தடுக்க முயன்ற புண்ணியகோடியை பீர் பாட்டிலாலும், வசந்த குமாரை இரும்பு பைப்பாலும் தாக்கினர்.
அதோடு கத்தியை காட்டி கோழியை அறுப்பது போல் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதனை பார்த்து பயந்து போன குமார், வசந்தகுமார், புண்ணியகோடி மற்றும் அகிலன் ஆகியோர் அலறல் சத்தம் போட்டனர்.
இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததும் தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குமார் உள்பட 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து குமார் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள்.