செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1½ வயது குழந்தை உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா

Published On 2020-05-21 10:20 GMT   |   Update On 2020-05-21 10:20 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1½ வயது குழந்தை உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி மற்றும் சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 42 பேர் மராட்டிய மாநிலம் மும்பையில் தொழில் செய்தும், வேலை பார்த்தும் வந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், தொழில் மற்றும் வேலைவாய்ப்பை இழந்த அவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 2 தனியார் பஸ்களில் மும்பையில் இருந்து கறம்பக்குடிக்கு வந்தனர்.

அவர்களில் 21 பேர் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 21 பேர் காட்டாத்தி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களின் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 1½ வயது குழந்தை உள்பட 7 பேர் கறம்பக்குடியை சேர்ந்தவர்கள், ஒருவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியையும், மற்றொருவர் தஞ்சாவூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதைத்தொடர்ந்து அந்த 9 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 33 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேர் தங்கி இருந்த அரசு பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து, தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் முகாமில் தங்கி இருந்தவர்களிடம் தொடர்பில் இருந்த வருவாய், பேரூராட்சி, சுகாதார துறையினருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கறம்பக்குடியை சேர்ந்த 7 பேர் உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News