செய்திகள்
மதுபானங்கள்

புதுவையில் மதுக்கடைகள் இன்று திறக்கப்படவில்லை- கவர்னர் அனுமதி தராததால் தாமதம்

Published On 2020-05-20 14:53 IST   |   Update On 2020-05-20 14:53:00 IST
கவர்னர் கிரண்பேடி மதுபான கடைகளை திறக்கும் கோப்பில் கையெழுத்திடுவாரா? அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பாரா? என்பது இன்று தெரியவரும்.
புதுச்சேரி:

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24-ந் தேதி முதல் புதுவையில் கள், சாராயம், மதுபான கடைகள் மூடப்பட்டு கிடக்கிறது.

3-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்ததை தொடர்ந்து டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 7-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. ஐகோர்ட்டு தலையீட்டால் 9-ந் தேதி மூடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டை தொடர்ந்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

ஆனால், புதுவையில் 3-ம் கட்ட ஊரடங்கு தளர்விலும் மதுபான கடைகள் திறக்கப்படவில்லை. இத னால் மதுபிரியர்கள் தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க சென்றனர்.

4-ம் கட்ட ஊரடங்கில் மதுபான கடைகளை திறக்க புதுவை அரசு முடிவு செய்தது. நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்தது. 19-ந் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

இதுதொடர்பான கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கோப்பை கவர்னர் திருப்பி அனுப்பிவிட்டார். கொரோனா வரி மதுவிற்கு விதிக்காததால் கோப்பை கவர்னர் திருப்பி அனுப்பியதாக கூறப்பட்டது. இதனால் ஒரே நாளில் 2-வது முறையாக மீண்டும் அமைச்சரவை கூடியது.

இந்த கூட்டத்தில் புதுவை, காரைக்காலில் 25 சதவீதமும், மாகியில் 30 சதவீதமும், ஏனாமில் 35 சதவீதமும் அதிகபட்ச விற்பனை விலையில் மதுபானங்களுக்கு கோவிட் (கொரோனா) வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஒரு நாள் கழித்து இன்று (புதன்கிழமை) மதுபான கடைகள் திறக்கப்படும் என தெரிவித்தார்.

ஆனால் இதுதொடர்பான கோப்பு மீண்டும் கவர்னருக்கு நேற்று இரவு 8 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் இந்த கோப்பு தொடர்பாக நள்ளிரவு வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனால் இன்று திறக்கப்படவிருந்த மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை. வழக்கமாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவில் கவர்னருக்கு சந்தேகம் ஏற்பட்டால் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்புவார்கள்.

2-வது முறை அமைச்சரவையில் முடிவெடுத்து கோப்பை கவர்னருக்கு அனுப்பினால் அதற்கு கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும்.

அதிலும் கருத்து வேறுபாடு இருந்தால் அந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் அனுப்பி விடுவார். இறுதி முடிவை மத்திய உள்துறை அமைச்சகம்தான் எடுக்கும்.

ஏற்கனவே கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க மதுபான கடைகளை ஏலம் விட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் அரசுக்கு வருவாயும் பெருகும் என குறிப்பிட்டிருந்தார். கவர்னர் மதுபான கடைகளை திறக்கும் கோப்பிற்கு கையெழுத்திடுவாரா? அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பாரா? என்பது இன்று தெரியவரும்.

கவர்னர் அனுமதி அளிக்கும்பட்சத்தில் அரசாணை வெளியிட வேண்டியிருக்கும். மேலும் சீல் வைக்கப்பட்ட மதுபான கடைகளை கலால் துறையினர் மேற்பார்வையில் அகற்ற வேண்டியிருக்கும்.

இதனால் இன்று மதுபான கடைகள் திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் இல்லை. நாளை முதல் மதுபான கடைகளை திறக்கும் வாய்ப்பு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோப்பை கவர்னர் அனுப்பி விட்டால் மதுபான கடைகளை திறப்பதற்கு மேலும் காலதாமதமாகும்.

Similar News