செய்திகள்
புதுக்கோட்டை அருகே 8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
புதுக்கோட்டை அருகே தண்ணீர் பிடிக்க சென்ற 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 55), இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் வித்யா (14). தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த அவர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று காலை வித்யா அவரது சகோதரியுடன் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிடாரி கோவில் குளத்தில் உள்ள ஊற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். வித்யா முதலில் செல்ல, அதன்பிறகு அவரது சகோதரி சென்றுள்ளார். பிடாரி கோவில் குளத்திற்கு சென்று பார்த்த போது அங்கு வித்யாவை காணவில்லை. இதனால் அவர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பெற்றோரும் உறவினர்களும் வித்யாவை தேடினர். அப்போது பாப்பான்குளம் அருகே தைலமரக்காட்டு பகுதியில் வித்யா ஆடைகள் களைந்து அலங்கோலமான நிலையில் கிடந்தார். முகத்தில் பலத்த காயம் இருந்ததுடன், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மூச்சு திணறியபடி கிடந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய வித்யாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நள்ளிரவில் உயிரிழந்தார்.
முதல்கட்ட விசாரணையில், வித்யாவை மர்மநபர்கள் தைல மரக்காட்டு பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.