செய்திகள்
கொரோனா சிறப்பு கடன் தொகைக்கான காசோலையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கிய காட்சி

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5½ கோடியில் கொரோனா சிறப்பு கடன் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-05-18 11:39 GMT   |   Update On 2020-05-18 11:39 GMT
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 கோடியே 47 லட்சம் கொரோனா சிறப்பு கடன் தொகைக்கான காசோலையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள 229 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 2,939 உறுப்பினர்களுக்கு ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு திட்ட நிதியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 255 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் 572 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும் என மொத்தம் 827 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.5 கோடியே 47 லட்சம் கொரோனா சிறப்பு கடன் தொகைக்கான காசோலையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

இத்திட்டத்தின் கீழ் ஒரு உறுப்பினருக்கு குறைந்தது ரூ.5 ஆயிரமும், அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்வைப்பு தொகை, காப்பு தொகை, சேவை கட்டணம், நடைமுறை கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும், தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை மகளிர் சுயஉதவி குழுவினர் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் கூறினார். மேலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்களையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

இதில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சின்னதம்பி, அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சாம்பசிவம், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News