செய்திகள்
இந்திய கரன்சி

புதுவையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைக்க திட்டம்

Published On 2020-05-16 18:33 IST   |   Update On 2020-05-16 18:33:00 IST
புதுவையில் அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதங்களில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அரசின் கையிருப்பு குறைந்துள்ளது. அரசுக்கு வருமானம் அளித்து வந்த மது விற்பனை, பத்திரப்பதிவு, சுற்றுலா, போக்குவரத்து ஆகியவை முற்றிலும் முடங்கியுள்ளதால் வருமானமும் வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு, 7-வது ஊதிய குழுவுக்கு வழங்க வேண்டிய தொகை என பல்வேறு நிதியும் கிடைக்கவில்லை. கொரோனா தடுப்பு பணிக்கும் மத்திய அரசு நிதி அளிக்கவில்லை.

இதனால் அடுத்த மாதங்களில் புதுவையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த தலைமை செயலாளருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்தின் நிதிநிலை மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்றும், மானியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.

பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளனர். ஊழியர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

பல மாநிலங்கள் இதுபோன்று நடவடிக்கை எடுத்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க ஏற்பாடு செய்து வருகின்றன.

புதுவை மாநிலத்தில் இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நானும், அரசு ஊழியர் சம்மேளன தலைவர்களை அழைத்து பேசி மே மாதம் சம்பளம் போடும்போது நம் மாநிலத்தின் நிதி பற்றாக்குறையை எந்த அளவுக்கு சரிசெய்ய முடியும் என்று ஆலோசனை நடத்த உள்ளேன்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Similar News