செய்திகள்
கோப்பு படம்

கள்ளக்காதலனை ஏவி கணவரை காரை ஏற்றி கொலை செய்தேன் - மனைவி பரபரப்பு வாக்குமூலம்

Published On 2020-05-16 12:18 GMT   |   Update On 2020-05-16 12:18 GMT
தினம்தினம் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததால் கள்ளக்காதலனை ஏவி கணவரை காரை ஏற்றி கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
வில்லியனூர்:

திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது41). இவர் தொண்டமாநத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (26).

கடந்த மார்ச் 14-ந் தேதி இரவு கந்தசாமி பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பத்துக்கண்ணு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த கார் மோதி கந்தசாமி படுகாயம் அடைந்தார். ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுதொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கந்தசாமி சாவில் மர்மம் உள்ளதாகவும் அவரை யாரோ திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்ததாக கந்தசாமியின் தாயார் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கனவே கணவன்- மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு போலீசில் புகார் தெரிவித்து இருந்த தால் கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து புவனேஸ் வரியை பிடித்து வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் புவனேஸ்வரி கள்ளக் காதலனை ஏவி காரை ஏற்றி கந்தசாமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து புவனேஸ்வரி மற்றும் அவரது கள்ளக் காதலன் அஜித்குமார் மற்றும் காரை ஏற்றி கொலை செய்த அஜித்குமாரின் நண்பர் பிரவீன்குமார் ஆகிய 3 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை கொரோனா பரிசோதனைக்கு பின்பு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் புவனேஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

எனது கணவர் கந்தசாமி யின் நண்பரான அஜித்குமாரை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அஜித்குமார் நண்பராக என்னிடம் பழகினார். ஆனால் அதனை எனது கணவர் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தார். இதுதொடர்பாக அடிக்கடி என்னிடம் தகராறு செய்து வந்தார்.

மேலும் வில்லியனூரில் நான் அடகு கடையில் வேலை செய்து வந்த போது என் கணவர் கந்தசாமி சந்தேகப்பட்டு வேலைக்கு செல்லும் போதும் வேலை முடிந்து வீடு திரும்பும் போதும் என்னை பின் தொடர்ந்து கண்காணிப்பார். தவறு செய்யாத என்மீது கணவர் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததால் தவறு செய்தால் என்ன? என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதனால் நானும் அஜித்குமாரும் நெருங்கி பழகி வந்தோம்.

இதனை நேரிலேயே பார்த்து விட்ட எனது கணவர் கந்தசாமி தினமும் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார். இதுபற்றி நான் அஜித்குமாரிடம் தெரிவித்து வந்தேன்.

தொடர்ந்து என்னை எனது கணவர் சித்ரவதை செய்ததால் அவரை கொலை செய்ய நானும் அஜித்குமாரும் முடிவு செய்தோம். அதற்கான திட்டத்தை அஜித்குமார் ஏற்பாடு செய்தார். சம்பவத்தன்று அவரது நண்பர் பிரவீன்குமார் மூலம் காரை ஏற்றி எனது கணவரை கொலை செய்தோம்.

இவ்வாறு புவனேஸ்வரி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tags:    

Similar News