செய்திகள்
நெல்

புதுவை விவசாயிகளிடம் மத்திய அரசு நெல் கொள்முதல் செய்ய அனுமதி

Published On 2020-05-15 19:06 IST   |   Update On 2020-05-15 19:06:00 IST
புதுவை நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் டன் அரிசி அளவிற்கான நெல்லை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் நவரை பருவ நெல் அறுவடை விரைவில் விவசாயிகளால் தொடங்கப்பட உள்ளது.

இந்த நெல்லை, இந்திய உணவுக் கழகமே நேரடியாக கொள்முதல் செய்தால், கொரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பலனளிப்பதாக இருக்கும் என மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு, முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த 6-ந்தேதி கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.

மத்திய வேளாண்துறை மந்திரியிடம் காணொலி காட்சி மூலமாக, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனும் கோரிக்கை வைத்திருந்தார். இதன்படி மே 15-ந் தேதி முதல் ஆகஸ்டு 30-ந் தேதி வரையிலான ராபி பருவத்தின்போது, புதுவை நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் டன் அரிசி அளவிற்கான நெல்லை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி அளித்துள்ளார்.

இதனால் விவசாயி களின் விளைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News