முதலியார்பேட்டையில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை அப்துல்கலாம் நகர் அரசு குடியிருப்பை சேர்ந்தவர் சூசை ஜெயக்குமார். இவரது மகன் ஜான் பீட்டர் (வயது27). இவர் ஆரோவிலில் தனியாருக்கு சொந்தமான ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இவர் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது ரோந்து வந்த போலீசாரை பார்த்ததும் ஜான் பீட்டர் மற்றும் அவரது நண்பர்கள் பயந்து அங்கிருந்து ஓடினர். அந்த நேரத்தில் ஜான்பீட்டரின் செல்போன் தவறி விழுந்து விட்டது.
அந்த செல்போனை போலீசார் எடுத்து சென்று இருப்பார்கள் என்று ஜான் பீட்டர் எண்ணியிருந்தார். ஆனால் ஏற்கனவே பழைய வழக்கு சம்பந்தமாக விசாரிக்க 2 முறை ஜான் பீட்டரை தேடி அவரது வீட்டுக்கு முதலியார் பேட்டை குற்ற பிரிவு போலீசார் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசாரை மிரட்டுவதற்காக ஜான்பீட்டர் பினாயிலை குடித்து விட்டு தற்கொலை செய்ய போகிறேன் என்று போலீஸ் நிலையம் எதிரே அமர்ந்தார். பின்னர் பினாயிலை குடித்ததின் காரணமாக நெஞ்சு எரிச்சலாக இருந்ததால் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.