செய்திகள்
திருநாவுக்கரசர்

கொரோனாவுடன் வாழ பழக சொல்வதா?- திருநாவுக்கரசர் கண்டனம்

Published On 2020-05-13 08:04 GMT   |   Update On 2020-05-13 08:04 GMT
கொரோனா வைரசுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கூறுவது ஏற்க கூடியது அல்ல என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நடைபெற்ற கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் நிதியையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டு விட்டது. வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க. எம்.பி.க்கள் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் நிதி திருப்பி அளிக்கப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

கொரோனா வைரசுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கூறுவது ஏற்க கூடியது அல்ல. இவ்வாறு கூறுவதற்கு எதற்கு அரசாங்கங்கள் இருக்க வேண்டும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மதுக்கடையை திறந்தது தவறு. கோர்ட்டு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க மேல்முறையீடு செய்ததும் தவறு. ரஜினிகாந்த் டாஸ்மாக் விவகாரம் குறித்து கூறிய கருத்து வரவேற்கத்தக்கது.

தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து போதுமான நிதியை பெற வேண்டும். தமிழக அரசு ரூ.5 ஆயிரம் ஒரு குடும்ப அட்டைக்கு வழங்க வேண்டும். மத்திய அரசும் பொதுமக்களுக்கு போதிய நிதியை நேரடியாக வழங்க வேண்டும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது தேவையற்றது. அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News