செய்திகள்
வெட்டிவேர்

விவசாயிகளுக்கு வெட்டிவேர் மதிப்பு கூட்டுதல் பயிற்சி- கலெக்டர் அன்புசெல்வன் தகவல்

Published On 2020-05-12 20:36 IST   |   Update On 2020-05-12 20:36:00 IST
விவசாயிகளுக்கு வெட்டிவேர் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் சுமார் 1,000 ஏக்கரில் வெட்டிவேர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் வெட்டிவேர் திண்டுக்கல், கோவை மற்றும் கர்நாடக மாநிலம் உடுப்பி ஆகிய நகரங்களில் இயங்கி வரும் நறுமண பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தற்போது ஊரடங்கு காலமாக இருப்பதால் மேற்கண்ட தொழிற்சாலைகள் இயங்காததால் வெட்டிவேர் கொள்முதல் செய்வதற்கு யாரும் வரவில்லை. இதனால் வெட்டிவேர் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. வெட்டிவேர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வெட்டிவேரை மதிப்புக் கூடுதல் செய்து திரைச்சீலைகள், மாலைகள், தலையணை மற்றும் தேய்ப்பான் ஆகியவை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தடுப்பை கருத்தில் கொண்டு அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில் வெட்டி வேரை கொண்டு பிரத்யேகமாக முகக்கவசங்களை தயாரிக்க விவசாயிகளும் அவர்களை சார்ந்த தொழில் முனைவோரும் முன்வந்துள்ளனர்.

இதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதுடன் பலருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக விவசாயிகள் மூலம் தயாரிக்கப்பட்ட 2 ஆயிரம் வெட்டிவேர் முகக்கவசங்களை கொள்முதல் செய்து காவல் துறைக்கு வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக தோட்டக் கலைத்துறை மூலம் வெட்டிவேர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயிர் கடன் வழங்க வெட்டிவேர் சாகுபடிக்கு தற்போது ரூ.5 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சாகுபடி செலவினங்களை கருத்தில் கொண்டு உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் மற்ற பகுதிகளில் கொள்முதல் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட 2 ஆயிரம் வெட்டிவேர் முகக்கவசங்களை கலெக்டர் அன்பு செல்வன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவிடம் வழங்கினார். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பூவராகன் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுரேஷ் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News