செய்திகள்
மது பாட்டில்கள் திருட்டு - கோப்புப்படம்

திருமயம் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் திருட்டு

Published On 2020-05-11 18:49 IST   |   Update On 2020-05-11 18:49:00 IST
திருமயம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மது பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலிருந்து வாரியப்பட்டி செல்லும் சாலையில் உள்ள புதிய கோர்ட்டு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை குடியிருப்பு பகுதியில் இருந்து சற்றுதூரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 7-ந்தேதி இக்கடை திறக்கப்பட்டது. அதன்பின் கோர்ட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை தொடர்ந்து இக்கடையும் மூடப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலையில் அக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியினர் திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் இரவில் மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இது பாதுகாப்பற்ற பகுதியில் இருந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த இரவு காவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News