செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

கொரோனாவை எதிர்த்து வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது- நாராயணசாமி

Published On 2020-05-10 14:08 IST   |   Update On 2020-05-10 14:08:00 IST
கொரோனாவை எதிர்த்து வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கால் அனைத்து மாநிலமும் பொருளாதார நெருக்கடியில் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடமுடியவில்லை. மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்ற முடியவில்லை. ஊரடங்கினால் மாநில வருமானம் குறைந்துவிட்டது. அதை மத்திய அரசுதான் ஈடு செய்ய வேண்டும். மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. அதை பின்பற்றி மாநிலங்களில் தொழிற்சாலைகள், கடைகள் மூடப்பட்டன.

எனவே மாநிலங்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. எனவே பிரதமர் நிபுணர் குழுவை ஒருவாரத்தில் அமைக்க வேண்டும். அந்த குழு மூலம் எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றினால் மாநில அரசு பொருளாதாரத்தில் உயர முடியும். மாநில அரசுகளுக்கு எந்த நிதி ஆதாரத்தை மத்திய அரசு கொடுக்க முடியும் என்று பரிந்துரை செய்ய வேண்டும்.

புதுவை மாநிலத்திற்கு ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்கவும், நிதி கமி‌ஷனில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் கிடைக்காததால் கடன் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

ஊரடங்கிற்கு முன் கொரோனாவில் 700 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இறப்பு 250 பேராக இருந்தது. ஊரடங்கை கடைபிடிக்கும் தற்போது 60 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நாம் தனிமைப்படுத்திக் கொண்டாலும் கொரோனா வருவது இப்போது தெளிவாக தெரிகிறது.

கொரோனாவில் இருந்து மீண்டு வருவது 30 சதவீதமாக உள்ளது. ஆகவே இப்போது கொரோனாவை எதிர்த்து வாழ வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை புதுவை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

Similar News