கோரிமேட்டில் இரு தரப்பினர் மோதல்- 3 பேர் காயம்
புதுச்சேரி:
புதுவை குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த ராஜ். இவரது மனைவி சுதா (வயது35). இவர்களது வீட்டின் மாடியில் ஜெகதீசன் என்பவர் தனது தாய் சுசீலா தனது மகன் ராமகிருஷ்ணன், மகள் ஸ்ரீதேவி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையே வீட்டின் உரிமையாளர் சுதாவுக்கும் ஜெகதீசனுக்கும் மின்சாரம் மற்றும் குடிநீரை உபயோகப்படுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. மேலும் கொரோனா தொற்று உள்ள நிலையில் ஜெகதீசனின் குடும்பத்தினர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று வந்ததால் இதனை சுதா கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுதாவின் குழந்தைகள் நேற்று ஜெகதீசன் வசித்த மாடியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது இதனை ஜெகதீசனின் குடும்பத்தினர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஆயுதங்களால் மாறிமாறி தாக்கி கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த சுமதியின் மகள் ஸ்ரீதேவி, சுமதியின் தம்பி சத்யராஜ் மற்றும் ஜெகதீசனின் மகன் ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.
இந்த மோதல் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கோரிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.