செய்திகள்
கொரோனா வைரஸ்

அரியாங்குப்பத்தில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பகுதிகள் இன்று திறப்பு

Published On 2020-05-10 13:27 IST   |   Update On 2020-05-10 13:27:00 IST
அரியாங்குப்பத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மூடப்பட்ட பகுதிகள் இன்று திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சிக்குள்ளானார்கள்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் சொர்ணாநகரில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சொர்ணாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அம்பேத்கார்நகர், கோட்டைமேடு, பி.சி.பி.நகர், காய்கறி மார்க்கெட், காளான் தோட்டம் உள்பட அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட நகர்கள் சீல் வைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 35-நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி போனார்கள்.

தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து 3 பேரும் முற்றிலும் குணமாகி விட்ட நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை திறந்து விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெயமூர்த்தியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அவர் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சம்பவ இடத்துக்கு வந்து மத்திய அரசிடம் பேசி விரைவில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளை திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதற்கிடையே நேற்று கோட்டைமேடு பகுதி மக்கள் அப்பகுதியில் உள்ள தடுப்புகளை கட்டைகளை அகற்றி தங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். சீல் வைக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதன்படி சொர்ணா நகரை தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் இன்று காலை திறக்கப்பட்டன. கலெக்டர் அருண் முன்னிலையில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. அவ்வழிகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு வழிவகை ஏற்படுத்தினார். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சிக்குள்ளானார்கள்.

Similar News