செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

கொரோனா தடுப்பு பணிகளை கவர்னர் கிரண்பேடி தடுக்கிறார்- பிரதமரிடம் நாராயணசாமி புகார்

Published On 2020-05-09 10:33 GMT   |   Update On 2020-05-09 10:33 GMT
அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு கொரோனா தடுப்பு பணிகளை கவர்னர் கிரண்பேடி தடுத்து வருகிறார் என்று பிரதமருக்கு புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.
புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து அரசின் செயல்பாடுகளில் தலையிட்டு குந்தகம் விளைவித்து வருகிறார். அரசுக்கு எதிராக பல கடிதங்களை மத்திய அரசுக்கு கிரண்பேடி எழுதியுள்ளார். 30-க்கும் மேற்பட்ட புகார்களை சி.பி.ஐ.க்கு அனுப்பியுள்ளார். ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

ஊரடங்கில் மதுவிற்பனை தொடர்பாக சி.பி.ஐ.யிடம் கிரண்பேடி கொடுத்த புகாரை பொருத்தவரையில் முதலில் அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அதிகாரிகளை மிரட்ட கலால்துறை பிரச்சனையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மதுக்கடை உரிமையாளர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கலால்துறை நடவடிக்கை எடுக்கும். கிரண்பேடிக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதிகாரிகளின் நேரத்தை வீணடித்து அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு கொரோனா தடுப்பு பணியை செய்யவிடாமல் கிரண்பேடி தடுத்து வருகிறார். இதனை ஏற்க முடியாது.

யார் தவறு செய்தாலும் அரசு அவர்களை காப்பாற்றாது. ஆனால் தவறு செய்யாதவர்கள் மீது பொய் வழக்கு போட நினைத்தால் அவர்களை காப்பாற்ற எங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும். இதுதான் எங்கள் அரசின் கொள்கை. இதனை கிரண்பேடி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கவர்னரின் நடவடிக்கை காவல்துறை பணியாளர் வேலையை போன்றுள்ளது. அவருடைய இந்த செயல்பாடுகள் சம்பந்தமாக முழுமையான கடிதம் பிரதமருக்கு எழுதியுள்ளேன். அவர்களும் அதனை பரிசீலனை செய்து வருகின்றனர். விரைவில் இதற்கு முடிவு ஏற்படும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


Tags:    

Similar News