செய்திகள்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுவையை சேர்ந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ்

Published On 2020-05-09 15:54 IST   |   Update On 2020-05-09 15:54:00 IST
கடலூர், விழுப்புரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதுவையை சேர்ந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை கதிர்காமம் அரசு கொரோனா மருத்துவ மனையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோயம்பேட்டுடன் தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்லிப்பட்டு சேர்ந்த நபர் யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. நேரடியாக மருத்துவனைக்கு வந்துவிட்டார். இதனால் அவரிடமிருந்து யாருக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை. அதேநேரத்தில் அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் புதுவையை சேர்ந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள புதுவையை சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மீண்டும் புதுவை திரும்ப பதிவு செய்துள்ளனர். அவர்களை எப்படி அழைத்து வருவது? என்பது குறித்து முதல்-அமைச்சர், கலெக்டர், நோடல் அதிகாரி ஆகியோரிடம் ஆலோசித்து வருகிறோம்.

பதிவு செய்தவர்கள் முழுமையான முகவரியை தரவில்லை. அவர்களிடம் முழு விபரங்களையும் சேகரித்து வருகிறோம். தொடர்ந்து ஊரடங்கை மட்டும் நீட்டித்து கொண்டே இருக்க முடியாது. பொதுமக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவதை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மத்திய அரசு அதிகாரிகள் நேற்று எங்களை தொடர்புகொண்டு பேசினர். அப்போது புதுவையில் எவ்வாறு தொற்று பரவாமல் உள்ளது? அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என வியப்புடன் கேட்கின்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பினால்தான் இது சாத்தியமாகியுள்ளது என தெரிவித்தேன். மத்திய அரசு இதற்காக பாராட்டு தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு புதுவை மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News