செய்திகள்
மீன்கள்

கடலூரில் மீன் வாங்க அலைமோதிய பொதுமக்கள்

Published On 2020-05-07 17:04 IST   |   Update On 2020-05-07 17:04:00 IST
கடலூரில் மீன்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மீன்களை வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.
கடலூர்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மீன் மார்க்கெட்டில் மீன்கள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீன் பிடிக்க சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. கட்டுமரம், பைபர் படகுகளில் மட்டும் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

மீன் விற்பனை செய்யும் இடங்களையும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கடலூர் துறைமுகம் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் சிப்காட்டிலும், தேவனாம்பட்டினம் பகுதியில் பிடிக்கும் மீன்கள் உப்பனாறு பகுதியிலும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒதுக்கப்பட்ட 2 இடங்களில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. அங்கு மீன்களை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.

குமரி மாவட்டத்தில் குளச்சல், நாகர்கோவில் உள்ளிட்ட மீனவ பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மீன் விற்பனை நடந்து வருகிறது.

இங்கு வந்து மீன்களை வாங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன் பிடிக்க சென்று வருகிறார்கள். இதனால் வழக்கமாக வரும் மீன்களைவிட குறைந்த அளவு மீன்களே விற்பனைக்கு வருகிறது. மீன்களை வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தே வாங்கி செல்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் தொடர் ஊரடங்கு உத்தரவால் மீன் விற்பனை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து தஞ்சைக்கு மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் மீன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வியாபாரிகள் மீன்கள் வாங்கி விற்பனை செய்து வந்தனர். ஆனால் அங்கு கொரோனா பாதிப்பு அதிகமானதால் அங்கு மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Similar News