மணக்குள விநாயகர் கோவில் யானைக்கு தினமும் பரிசோதனை- 3 வேளை ஷவர் குளியல்
புதுச்சேரி:
கொரோனா நோய் பரவலைத் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது முதல் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளது.
புதுவையின் புகழ்மிக்க மணக்குள விநாயகர் கோவிலும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. கோவிலின் யானையான “லட்சுமி” அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் உள்ள கொட்டிலில் வைத்து பராமரிக்கப்படுகிறது.
தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் கோவில் யானை லட்சுமிக்கு 3 வேளை ஷவர் குளியலுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
தினமும் உணவாக அரிசி சாதம், 5 வித தானியங்களை கொண்ட உணவு, தர்பூசணி, கிர்ணி பழம் போன்றவை அளிக்கப்படுகின்றது.
மேலும் யானைக்கு உணவு தயாரிப்பதற்கு முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும், கையுறையும் முக கவசம் அணிய வேண்டும் என்று யானை பாகன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கத்திரி வெயில் காலத்தில் யானைக்கு நோய் வராமல் தடுக்க கால்நடை மருத்துவர் தினமும் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.