செய்திகள்
வேப்பூர் அருகே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள பள்ளியில் கலெக்டர் ஆய்வு
வேப்பூர் அருகே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள பள்ளியில் கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.
வேப்பூர்:
வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பலர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்தனர். அங்கு பணி செய்த சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால் மார்க்கெட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. இதனால், அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு வந்தனர். இவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி வேப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 195 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் நேற்று இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தடுப்பு நடவடிக்கைகள், உணவுகள், அத்தியாவசிய தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர், மேலும் தனிமைப்படுத்தபட்டுள்ளவர்களிடம் பயப்படாமல் அனைவரும், ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது அவருடன் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார்கள் விருத்தாசலம் கவியரசு, வேப்பூர் கமலா, தனி தாசில்தார் செல்வமணி, நில எடுப்பு தாசில்தார் ரத்னாவதி, சமூக நல தாசில்தார் ஜெயசீலன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பழனி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.