செய்திகள்
கலெக்டர் அன்புசெல்வன்

கடலூர் மாவட்டத்தில் 3-ந் தேதி முழு ஊரடங்கு - கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-05-01 14:50 IST   |   Update On 2020-05-01 14:50:00 IST
கடலூரில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வருகிற 3-ந் தேதி முழு ஊரடங்கை கலெக்டர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்து கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டம் சிவப்பு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 27 பேர் பாதிக்கபட்டு உள்ளனர்.

எனவே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வருகிற 3-ந் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கபட்டு உள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகமெங்கிலும் பரவியுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் இந்நோய் தொற்றினை தற்போது உலகளாவிய தொற்று நோயாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் இந்நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுத்திட தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்டம் முழுவதும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் முழு கடையடைப்பு மற்றும் ஊரடங்கு கடை பிடிக்கப்படும்.

எனவே மருந்தகங்களை தவிர ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். மேற்படி ஆணையை கடை பிடிக்காதவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் கொள்ளை நோய்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News