செய்திகள்
கல்லூரி மாணவர் அகில்

தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2020-04-30 14:25 GMT   |   Update On 2020-04-30 14:25 GMT
நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார். பாறை இடுக்கில் சிக்கி இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன். இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு அகில்(வயது 20), நிகில் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் அகில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் அகில் தனது தம்பி நிகில் மற்றும் உறவினர்களுடன் மரப்பாலத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.

அங்கு அகில் பாறை மீது நின்று செல்பி எடுக்க முயன்றார். அப்போது கால் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்து சுழலில் சிக்கினார். தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த உறவினர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரில் மூழ்கிய அகிலை தேடும் பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் இருள் சூழ தொடங்கியதாலும், மழை பெய்ததாலும் மீட்பு பணி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பாறை இடுக்கில் சிக்கி இருந்த அகிலின் உடல் மீட்கப்பட்டது. 
Tags:    

Similar News