செய்திகள்
போராட்டம்

குன்னூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை திறக்ககோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-04-28 18:52 IST   |   Update On 2020-04-28 18:52:00 IST
குன்னூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை திறக்ககோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 9 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் குன்னூரை சேர்ந்தவர்கள். இதையடுத்து நகர பகுதியான ராஜாஜி நகர், உழவர் சந்தை, மாடல் ஹவுஸ், காமராஜபுரம், பழைய ஆஸ்பத்திரி லைன் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டன. அங்குள்ள பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லவும், வெளியாட்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் யாரும் அத்தியாவிசய பொருட்களையோ வாங்க முடிய வில்லை. மருத்துவ மனைக்கோ செல்ல முடிய வில்லை. ஈம சடங்குகள் மற்றும் மரணம் அடைந்தவர்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. வீட்டிற்கு சமையல் கேஸ்சை கூட வாங்க முடியாமல் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நேற்று பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றாக திரண்டு தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதிகளை உடனே திறக்க வேண்டும். எங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்று வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான பொருட்கள் எவ்வித தடையு மின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

Similar News