செய்திகள்
பலி

விருத்தாசலத்தில் கொரோனா பாதித்த பகுதியில் அடுத்தடுத்து 2 பேர் பலி

Published On 2020-04-28 16:43 IST   |   Update On 2020-04-28 16:43:00 IST
விருத்தாசலத்தில் கொரோனா பாதித்த பகுதியில் அடுத்தடுத்து 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர்கள்.

இதையடுத்து விருத்தாசலம் நகராட்சியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்துக்குட்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதியில் வசிப்போர் வெளியே செல்லவும், வெளிநபர்கள் உள்ளே வரவும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வீரபாண்டியன் தெருவை சேர்ந்த ஒருவரும், ஆலடி சாலை பகுதியை சேர்ந்த ஒருவரும் திடீரென இறந்தனர். இவர்கள் கொரோனா பாதித்த பகுதியில் வசித்ததால் நோய் தொற்று இருக்கும் என கருதி யாரும் அங்கு செல்லவில்லை.

இது குறித்து சுகாதாரதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரமா தலைமையிலான குழுவினர் அங்கு சென்றனர். 2 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்களின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டது. அவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பின்னர் 2 பேர் எப்படி இறந்தனர்? என்பது பற்றிய விவரம் தெரியவரும்.

அடுத்தடுத்து 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News