செய்திகள்
கோப்பு படம்

வடகாட்டில் காவல் நிலையத்தில் காதல் திருமணம் - கர்ப்பிணி காதலியை கரம் பிடித்த காதலன்

Published On 2020-04-28 08:04 GMT   |   Update On 2020-04-28 08:04 GMT
ஆலங்குடி அருகே வடகாட்டில் காவல் நிலையத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கர்ப்பிணி காதலியை காதலன் கரம் பிடித்தார்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு சேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபு (வயது 24). இவரும் அதே பகுதி வடக்குப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் மகள் புனிதா (20) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

இருவரும் வரம்பு மீறி பழகியதால் புனிதா 4 மாத கர்ப்பிணியானார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு புனிதா பிரபுவை வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு பிரபுவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கடந்த மாதம் பிரபு தலைமறைவாகிவிட்டார்.

இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை தேடி வந்தனர். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் தன்னால் தான் புனிதா கர்ப்பமானார் என்பதையும், தான் செய்த தவறை உணர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து வடகாடு காவல் நிலையத்தில் அக்கிராமத்தினர் முன்னிலையில் வடகாடு காவல் இன்ஸ்பெக்டர் பரத் சீனிவாஸ் மற்றும் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் தலைமையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News