செய்திகள்
கைது

வில்லியனூர் அருகே பெண் மீது தாக்குதல் கணவன்-மனைவி உள்பட 4 பேர் கைது

Published On 2020-04-27 14:11 IST   |   Update On 2020-04-27 14:11:00 IST
வில்லியனூர் அருகே பூச்செடியை சேதப்படுத்திய தகராறில் பெண் மீது தாக்குதல் கணவன்-மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே சேத்தநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் காந்திமதி (வயது24). இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் காந்திமதியின் சிறிய மாமனார் சுப்பிரமணி வசித்து வருகிறார். இருவரின் வீட்டின் இடைவெளியில் பொதுவான இடம் உள்ளது. அந்த இடத்தில் சுப்பிரமணி பூச்செடி வைத்து வளர்த்து வந்தார்.

இந்த பூச்செடிகளுக்கு தினமும் சுப்பிரமணியன் குடும்பத்தினர் தண்ணீர் ஊற்றி வந்தனர். அந்த தண்ணீர் காந்திமதியின் வீட்டின் சுவற்றில் பாய்ந்து ஈர கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே அந்த பூச்செடியை அகற்றுமாறு காந்திமதி கூறி வந்தார். ஆனால் சுப்பிரமணியின் குடும்பத்தினர் பூச்செடியை அகற்றவில்லை. சம்பவத்தன்று காந்திமதி அந்த பூச்செடிகளை அகற்றி வீசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி அவரது மனைவி தமிழ்செல்வி மற்றும் அவரது மகன்கள் சிவா, சிலம்பரசன் ஆகிய 4 பேரும் சேர்ந்து காந்திமதியை தடியாலும், கையாலும் தாக்கினர். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த காந்திமதி சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணி அவரது மனைவி தமிழ்செல்வி மற்றும் அவரது மகன்கள் சிவா, சிலம்பரசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Similar News