செய்திகள்
கோப்பு படம்

அரியலூர் மருந்து கடையில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா

Published On 2020-04-19 13:32 IST   |   Update On 2020-04-19 13:32:00 IST
அரியலூர் மாவட்டம் அருகே மருந்து கடையில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செந்துறை:

அரியலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் 22-ந் தேதி டெல்லி மாநாட்டிற்கு 5 பேர் சென்று வந்தனர். இதில் செந்துறையை சேர்ந்த ஒருவர் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரை ஏற்கனவே மருத்துவ குழுவினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அவரது மெடிக்கலில் வேலை பார்த்த ஊழியர்களை பரிசோதனை செய்தனர். அவர்களில் செந்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் நள்ளிரவில் மருத்துவ குழுவினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 2 பெண்களின் உறவினர்கள் 10 பேரை மருத்துவ பரிசோதனைக்காக செந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு ரத்த மாதிரி மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் அவரது கடையில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட மக்கள் இடையே பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News