குன்னூரில் தேயிலை தொழிலாளர்கள் போராட்டம்
ஊட்டி:
குன்னூர் அருகே தனியார் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியை பின்பற்றி போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை, தொழிலாளர் நல அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் 2 மாத சம்பளத்தை தர வேண்டும் என பொதுமக்கள் கூறினர். ஆனால் நிர்வாகம் தரப்பில் எஸ்டேட் உரிமையாளரிடம் கேட்டு தகவல் தெரிவிப்பதாக கூறப்பட்டது. இன்று நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.