செய்திகள்
செந்துறை அருகே தந்தையுடன் சென்ற 3 குழந்தைகள் மாயம்
செந்துறை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தந்தையுடன் சென்ற 3 குழந்தைகள் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரைச் சேர்ந்தவர் பச்சைமுத்து (வயது 35). இவரது மனைவி கடந்த ஆண்டு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு விஜய் (10), பவானி (7), அரவிந்த் (4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அந்த குழந்தைகளை பச்சைமுத்து கடந்த 20-ந்தேதி ஊருக்கு அழைத்து செல்வதாகக்கூறி அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அடுத்த நாள் திரும்பி வரும்போது உடன் குழந்தைகள் இல்லாத தைக்கண்டு, உறவினர்கள் விசாரித்த போது, அரியலூரில் பேருந்து நிலையத்திலேயே விட்டுவிட்டு, வந்து விட்டதாக கூறியுள்ளார்.
அதில் நம்பிக்கை இல்லாத சிலர் மிரட்டி விசாரித்தபோது குழந்தைகளை விற்று விட்டதாக கூறியிருக்கிறார். உடனே அவரை செந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் காணாமல் போன குழந்தைகளின் தாத்தா தங்கவேல் செந்துறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.