செய்திகள்
மாவட்ட கலெக்டர் பொன்னையா

காஞ்சிபுரத்தில் ஊரடங்கின்போது அவசரமாக பயணம் செய்ய இணையதளம் மூலம் அனுமதி பெறலாம்

Published On 2020-04-06 11:54 GMT   |   Update On 2020-04-06 11:54 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கின்போது அவசர பயணம் மேற்கொள்ள இணையதளம் மூலம் அனுமதி பெறலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது திருமணம், இறப்பு மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்களுக்காக அவசரமாக பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திருமணம், இறப்பு மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்களுக்காக மட்டும் பயணம் செய்ய வேண்டி இருப்பின் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் அனுமதி வேண்டி
https://kanchi.nic.in
என்ற முகவரியில் இணையதளம் மூலமாகவோ அல்லது கைப்பேசி மூலமாகவோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் முறையான விசாரணைக்குபின் விண்ணப்பதாரர்களின் அனுமதி விவரம் மின்னஞ்சல் மூலமாகவும், குறுஞ்செய்தியாக விண்ணப்பதாரரின் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சேவைக்காக பொதுமக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கோ அல்லது வேறு எந்த அரசு அலுவலகங்களுக்கோ நேரிடையாக செல்ல வேண்டிய தேவையில்லை.

இவ்வாறு அனுமதி பெற்று பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் அனைத்து சூழ்நிலைகளிலும் கைகழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு நோய்த்தொற்று பரவுதலை தடுக்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News