செய்திகள்
கொரோனா வைரஸ்

அரியலூர் பெண்ணுக்கு கொரோனா தொற்று: பெற்றோர், மகள் உள்பட 14 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை

Published On 2020-03-28 17:49 GMT   |   Update On 2020-03-28 17:49 GMT
சென்னையில் வேலை பார்த்து வந்த அரியலூர் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பெற்றோர், மகள் உள்பட 14 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.

அரியலூர்:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கெரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 25 வயது பெண்ணுக்குகெரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த பெண்ணின் மகள், தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேரை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து வரு கின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரியலூர் அரசு மருத்து வமனையில் உள்ள கொரோனா வார்டில் பாதிக்கப்பட்ட பெண், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், 14 பேரையும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் சென்னை வேளச் சேரியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

அவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட பிறகு கடந்த 25-ந்தேதி அரியலூர் வந்துள்ளார். அன்றைய தினம் அரியலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் அறி குறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், வீட்டில் இருந்த போது அவர் யாருடன் தொடர்பில் இருந்துள்ளார். வெளியிடங்களுக்கு சென்று வந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சென்னையில் பணியாற்றியபோது யார், யாருடன் தொடர்பில் இருந்தார், எங்கெங்கு சென்றார் உள்ளிட்ட விபரங்களையும் சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News