கோபி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு- 2 பேர் உயிர் தப்பினர்
கோபி:
கோவை கரட்டூர் மேட்டை சிறந்தவர் சார்ஜகான் (வயது 39). இவர் நேற்றிரவு கோபி அருகே உள்ள உடையாம் பாளையத்தில் உள்ள ஒருவரின் காரை விலைக்கு வாங்குவதற்காக தனது காரில் உடையாம் பாளையத்திற்கு வந்தார்.
பின்னர் விலைக்கு வாங்கிய காரை சார்ஜஹான் ஓட்டிப் பார்த்தார். பின்னர் மீண்டும் தனது காரில் சார்ஜஹான் மற்றொருவர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கார் திடீரென தீ பிடிக்க தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சார்ஜஹான் மற்றொருவர் காரில் இருந்து வேகமாக கீழே இறங்கி ஓடி வந்தனர்.
இது குறித்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீச்சி அடித்து அணைத்தனர். எனினும் கார் எரிந்து நாசமானது. காரில் இருந்து இரண்டு பேர் இறங்கி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.