செய்திகள்
ஓடையில் மூழ்கி 2-ம் வகுப்பு மாணவன் பலி

அம்மாபேட்டை அருகே ஓடையில் மூழ்கி 2-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2020-03-15 10:03 GMT   |   Update On 2020-03-15 10:03 GMT
அம்மாபேட்டை அருகே ஓடையில் மூழ்கி 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே பூனாட்சி ஓடை மேடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 30). கட்டிட தொழிலாளி .இவரது மனைவி ராஜேஸ்வரி .இவர்களுக்கு அருண்குமார் (8) என்ற மகன் உள்ளான். அருண்குமார் குருவரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

கதிர்வேல் வீடு பின்புறம் ஒரு ஓடை செல்கிறது. இதில் தற்போது குறைந்த அளவு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று மாலை கதிர்வேல் வீட்டின் அருகே முள் வெட்டிக் கொண்டிருந்தார். வீட்டில் அருண்குமார் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி இருந்தார். ராஜேஸ்வரி வேலை விசயமாக வெளியே செல்வதாக சென்றுவிட்டார். அருண்குமார் மட்டும் வீட்டில் இருந்தான். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஓடை பகுதியில் வாத்து செல்வதை பார்த்த அருண்குமார் ஓடைப் பகுதிக்கு சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் ஓடைக்குள் விழுந்து மூழ்கினான். ஆனால் இது குறித்து வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியவில்லை.

பின்னர் சிறிது நேரத்தில் அருண்குமார் தந்தை மற்றும் தாய் வீட்டுக்கு வந்தபோது மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் மகனை தேடி பார்த்தனர் எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒருவேளை ஓடை பகுதிக்கு சென்று இருக்கலாம் என்று அங்கேயும் தேடி பார்த்தனர். இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அருண்குமாரை தேடி பார்த்தனர் பின்னர் இரவு நேரம் என்பதால் பணியை நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் அருன்குமாரை தேடும் பணி நடந்தது. அப்போது ஓடை பகுதியில் அருண்குமார் உடல் மிதந்தது . மகன் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News