செய்திகள்
கொள்ளை

பவானிசாகர் அருகே 2 கோவில்களின் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள்

Published On 2020-03-14 10:58 GMT   |   Update On 2020-03-14 10:58 GMT
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே 2 கோவில்களின் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை பள்ளத்து மாகாளியம்மன் கோவில் மற்றும் கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பவானிசாகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது கோவிலின் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொத்தமங்கலம் மாரியம்மன் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 2 மணி அளவில் 3 மர்ம நபர்கள் கையில் வேலுடன் பைக்கில் வந்து கோவில் பூட்டை உடைக்கின்றனர். பின்னர் உள்ளே நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடி கொண்டு ஓடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து பவானிசாகர் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றபோது காராச்சிக்கொரை மேடு பகுதியில் இருந்து புதுபீர்கடவு செல்லும் சாலை ஓரமாக வனப்பகுதியில் உண்டியல் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

உண்டியலில் சுமார் 5,000 பணம் இருந்ததாக கூறப்படுகிறது. சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News