செய்திகள்
கொலை

பெருந்துறையில் வடமாநில வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை

Published On 2020-03-13 09:11 GMT   |   Update On 2020-03-13 09:11 GMT
பெருந்துறையில் வடமாநில வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை:

பெருந்துறை அடுத்து உள்ள பணிக்கம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அருகிலேயே பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

ஒடிசா மாநிலம் குண்டாபாய் பகுதியை சேர்ந்த நாகேந்திரா பெகாரா (வயது30), அதே மாநிலத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பெஹாரா(19) ஆகியோர் அந்தக் பனியன் கம்பெனிக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர்.

நாகேந்திர பெகாராவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 4 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் அந்த 4 பேரும் நேற்று இரவு நாகேந்திரபெகாரா தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அந்த கும்பலுக்கும் அவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. திடீரெனு அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அருவாள் ,கத்தியால் நாகேந்திர பெகாராவை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் விழுந்து உயிருக்காக்க போராடினார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகேந்திர பெகாராவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்தபெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார் ,பெருந்துறை இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலைக்கு தொடர்புடைய சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News