செய்திகள்
கைது

விவசாயி கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு 5 ஆண்டு சிறை - அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2020-03-07 23:24 IST   |   Update On 2020-03-07 23:24:00 IST
விவசாயியை அடித்து கொலை செய்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். விவசாயி. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந் தேதி இவரது மகன் ஜீவகன், மீன்சுருட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் மணிகண்டன்(வயது 25), குமார்(23), திரிசங்கு மகன் துரைராஜ்(25) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து தங்களது மோட்டார் சைக்கிளை சீர் செய்து தருமாறு ஜீவகன் மற்றும் அவரது தந்தை சவுந்தரபாண்டியனிடம் கேட்டுள்ளனர். அப்போது இரவு நேரம் என்பதால் காலையில் சீர் செய்து தருவதாக கூறியுள்ளார்கள். அப்போது வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், குமார், துரைராஜ் ஆகியோர் ஜீவகன் தந்தை சவுந்தரபாண்டியனை கையால் தள்ளி கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி மறுநாள் (3.4.2019) உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், குமார், துரைராஜ் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. குற்றவாளிகளான மணிகண்டன், குமார், துரைராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயகுமார் தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News