செய்திகள்
உப்பு உற்பத்தி

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

Published On 2020-02-27 09:23 GMT   |   Update On 2020-02-27 09:23 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் இரண்டாம் இடம் வகிக்கிறது.

இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 25ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அகஸ்தியன்பள்ளியில் கோடியக்காடு, கடினெல்வயலில் ஆகிய பகுதிகளில் ஒன்பதாயிரம் ஏக்கரிலும் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

ஜனவரி மாதம் துவங்கி அக்டோபர் வரை நடைபெறும் உப்பு உற்பத்தி மூலம் ஆண்டு ஒன்றுக்கு 6 லட் சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தற்போது துவங்கி நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு உப்பு விலை 100 கிலோ மூட்டை ரூபாய் 2000 வரை விற்பனை ஆனது. இதனால் அகஸ்தியன்பள்ளியில் 3000 ஏக்கரில் முழுவீச்சில் நடைபெறுகிறது. தற்போது 100 கிலோ மூட்டை 900 ரூபாய் வரை விற்பனையாகிறது. உற்பத்தி முழுவீச்சில் இருப்பதால் உற்பத்தி இலக்கான 6 லட்சம் டன் உற்பத்தி ஆகும் எனவும் கஜா புயலால் பாதித்த வேதாரண்யம் பகுதியில் வீடு, தென்னை, மா, முந்திரி உள்ளிட்ட அனைத்திற்கும் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில் உப்பள பகுதிக்கு பாதித்த உப்பளங்களுக்கு இதுவரை அரசு எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை எனவும் இதனால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் எனவும் உப்பள சேதத்தை ஈடுகட்ட முடியாமல் வட்டிக்கு வாங்கி தற்போது உப்பள பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே கஜா புயலால் பாதித்த உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய செயலாளர் செந்தில் தெரிவித்தார்.

Tags:    

Similar News