மயிலாடுதுறை அருகே 2500 புதுச்சேரி சாராய பாட்டில்கள் பறிமுதல்- 2 பேர் கைது
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதிகளில் காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடத்தல் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதற்குத்தேவையான பாட்டில்களை காரில் கடத்திவருவது வாடிக்கை.
இந்த நிலையில் இன்று அதிகாலை பாபுராஜா என்ற உதவி ஆய்வாளர் தலைமையில் செயல்படும் சிறப்புப்படையினர் மயிலாடுதுறை அருகே குடைவிளாகம் என்ற பகுதியில் சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் 17 சாக்கு மூட்டைகளில் பாண்டிச்சாராயம் நிரப்பிய 2500 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலில் ஈடுபட்ட கார் ஓட்டுனர் கோடங்குடியை சேர்ந்த சின்னபிள்ளை மகன் மகேந்திரன், பிரபல கள்ளச்சாராய வியாபாரியான கோடங்குடியை சேர்ந்த மகாலிங்கம் மகன் ஜெயகாந்தன் (31) ஆகியோரைக் கைது செய்தனர். தொடர் கள்ளச்சாராயக் கடத்தலில் ஈடுபட்டதால் ஜெயகாந்தன் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு மாதத்திற்கு முன்பு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.