செய்திகள்
கோப்பு படம்

கணவர் சித்ரவதை: மகள்-மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2020-02-17 10:13 GMT   |   Update On 2020-02-17 10:13 GMT
கலெக்டர் அலுவலகத்தில் மகள்-மகனுடன் பெண் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை:

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்காக வந்திருந்தனர்.

மதுரை திருப்பாலையைச் சேர்ந்த வெர்னிகா அன்ன மேரி (வயது 38) என்பவர் தனது மகள்-மகளுடன் வந்திருந்தார். அவர் வரிசையில் காத்திருந்து மனு கொடுத்தபின் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.

வளாகத்தில் தனது மகள், மகனுடன் நின்றிருந்த வெர்னிகா அன்னமேரி திடீரென்று தான் மறைத்து வைத்து கொண்டு வந்த கேனில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டார். தொடர்ந்து மகள், மகனின் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் பதறியடித்து கூக்குரலிட்டனர். தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

3 பேரையும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், வெர்னிகா அன்னமேரி, அன்புச்செழியன் என்பவரை 2-வதாக திருமணம் செய்திருந்தார். கடந்த சில மாதங்களாக முதல் மனைவியுடன் சேர்ந்து தன்னையும், குழந்தைகளையும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News