செய்திகள்
தோட்டத்துக்குள் பாய்ந்து கிடந்த காய்கறி லாரி.

திண்டுக்கல் அருகே காய்கறி லாரி கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலி

Published On 2020-02-10 16:23 IST   |   Update On 2020-02-10 16:23:00 IST
திண்டுக்கல் அருகே காய்கறி லாரி தோட்டத்துக்குள் கவிழ்ந்ததில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆத்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்னை நோக்கி வந்தது. இந்த லாரியை சேவுகம்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது35) என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் கிளீனராக சதீஷ்குமார் (21) மற்றும் சென்னையில் கூலித்தொழிலாளர்களாக பணிபுரியும் சேவுகம் பட்டியை சேர்ந்த சிவக்குமார் (44), தனலட்சுமி (19), செல்வி (44), ஜோதி (45), முருகேஸ்வரி (40), பவித்ரா (18), அழகாபுரியை சேர்ந்த தாமோதரன் ஆகியோரும் வந்தனர்.

நேற்று இரவு வக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தோட்டத்துக்குள் பாய்ந்தது. இதனால் லாரியின் மீது இருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். காயம் அடைந்த அனைவரையும் ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் சரவணன், கிளீனர் சதீஷ்குமார் ஆகியோர் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 7 பேரும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News