செய்திகள்
காலை இழந்த பெண்ணுக்கு அமைச்சர் பணி ஆணையை வழங்கிய போது எடுத்த படம்.

விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு கிராம உதவியாளர் பணி - அமைச்சர் பணி ஆணையை வழங்கினார்

Published On 2020-02-08 18:18 IST   |   Update On 2020-02-08 18:18:00 IST
கோவை அருகே லாரி விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு கிராம உதவியாளர் பணி ஆணையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை:

கோவை அவினாசி ரோட்டில் கடந்த 11-11-19 அன்று கோல்ட் வின்ஸ் என்ற இடத்தில் கோவை சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ராஜேஸ்வரி(31). ஸ்கூட்டரில் வேலைக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பெண் மீது பின்னால் வந்த லாரி மோதியது.

இந்த விபத்தில் ராஜேஸ்வரியின் இடதுகால் நசுங்கியது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் ராஜேஸ்வரியின் இடதுகால் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

இதனால் அவர், தற்போது சக்கர நாற்காலியில் தனது அன்றாட பணியை செய்யும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராஜேஸ்வரியின் நிலைமை அறிந்து அவரது மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்தார்.

அதன்படி கோவை சங்கனூர் கிராமத்தில் கிராம உதவியாளர் பணிக்கு ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டார். அதற்கான பணி நியமன ஆணையை ராஜேஸ்வரியிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினர். பணி நியமன ஆணை பெற்றுக்கொண்ட ராஜேஸ்வரியும், அவருடைய தாயாரும், அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், ஓ.கே.சின்னராஜ், வி.பி. கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், வருவாய கோட்டாட்சியர் (தெற்கு) தனலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News