செய்திகள்
கோப்பு படம்

டேங்க் ஆப்ரேட்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2020-02-05 15:43 IST   |   Update On 2020-02-05 15:48:00 IST
அந்தியூர் அருகே ஊராட்சி குடிநீர் டேங்க் ஆபரேட்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியை சேர்ந்தவர் மாதையன், இவர் அப்பகுதி ஊராட்சி குடிநீர் டேங்க் ஆபரேட்டராக 30 வருடமாக பணிபுரிந்து வருகிறார்.

குடிநீர் மேல்நிலை தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து விடுவது சம்பந்தமாக மாதையனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிலர் தாக்கியதில் முகம்,தலையில் பலத்த காயம் பட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அந்தியூர் போலீசில் இது குறித்து அவர் புகார் அளித்தார், ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊர்மக்கள் அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் பிரதான சாலையில், பிரம்மதேசம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் டேங்க் ஆப்ரேட்டர் மாதையனை தாக்கியவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

இந்த திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அந்தியூர் - ஆப்பக் கூடல் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News