கோத்தகிரி அருகே பெண் வெட்டிக் கொலை
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டப்பட்டு பாரதி நகர் பகுதியில் சோறுட்டும் மலை உள்ளது. இது அடர்ந்த வன பகுதியாகும். இங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது.
இந்த பகுதியில் 60 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கால் வெட்டி துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் உடல் நிர்வாண நிலையிலும் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை. அவரை வெளியில் இருந்து யாராவது வன பகுதிக்கு கடத்தி வந்து கற்பழித்து விட்டு கொலை செய்தார்களா? அல்லது வேறு எங்காவது கொலை செய்து விட்டு பிணத்தை வன பகுதிக்குள் வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனையில் தான் பெண் கற்பழிக்கப்பட்டாரா? என்பது தெரியவரும்.