செய்திகள்
அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள்

அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் கீழே சாய்ந்தது - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2020-01-08 12:16 GMT   |   Update On 2020-01-08 12:16 GMT
நாகை மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் கீழே சாய்ந்தது. இதற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சாகுபடிக்காக வருடா வருடம் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

மேட்டூர் அணையில் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக கடந்த ஆண்டு காலதாமதமாக ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது நாகை மாவட்ட பாசனபகுதிகளுக்கு கால தாமதமாகவே வந்து சேர்ந்தது. இதையடுத்து அந்த பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு செய்து வந்தனர். தற்போது நெற்கதிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படாததால் அறுவடை பணிகளை தொடங்காமல் இருந்தனர்.

இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்ற சூராவளி காற்றுடன் பலத்தமழை பெய்தது.

இதில் வேளாங்கண்ணி, தெற்குப்பொய்கைநல்லூர், பரவை உள்ளிட்ட பகுதிகளில் மானாவரி பகுதி நிலபரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த சுமார் 100 ஏக்கர் சம்பா பயிர்கள் கீழே சாய்ந்தது. இதனை கண்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் பல இடங்களில் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பால்விடும் தருவாயில் வளர்ந்துள்ள பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு சொசைட்டியில் வாங்கிய விவசாய பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Tags:    

Similar News