செய்திகள்
நடுரோட்டில் கார் தீ பிடித்து எரியும் காட்சி.

வாணியம்பாடியில் நடுரோட்டில் கார் தீ பிடித்து எரிந்தது- 7 பேர் உயிர் தப்பினர்

Published On 2019-12-29 17:14 GMT   |   Update On 2019-12-29 17:14 GMT
வாணியம்பாடி சுங்கசாவடி அருகே நடுரோட்டில் கார் தீ பிடித்து எரிந்தது. இதில் 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வாணியம்பாடி:

கர்நாடக மாநிலம் மைசூர் மாண்டியாவை சேர்ந்தவர் குருபிரசாத். இவரது மகள் திருமணத்திற்கு பட்டு புடவை எடுக்க உறவினர்களான நமிதா, மேக்னா, சுருதி, சிவம்மா, மம்தா உள்ளிட்ட 6 பெண்களுடன் காஞ்சிபுரத்திற்கு நேற்று காரில் புறப்பட்டு வந்தார்.

பட்டுபுடவை எடுத்து முடித்த பின்னர் மீண்டும் மாண்டியாவுக்கு காரில் சென்றனர். வாணியம்பாடி சுங்கசாவடி அருகே கார் இரவு 11 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் என்ஜினீல் இருந்து திடீரென புகை வந்தது.

இதனைகண்ட குருபிரசாத் உடனடியாக காரை நிறுத்தினார். காரில் இருந்தவர்களை உடனடியாக வெளியே வரும்படி கூறினார்.

இதனால் காரில் இருந்த பெண்கள் பட்டு புடவைகளை எடுத்து கொண்டு வெளியேறினர். அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட சுங்கசாவடி ஊழியர்கள் அம்பலூர் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தீ விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News