வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க காட்டுக்குள் சென்ற வனக்காப்பாளர் யானை மிதித்து பலி
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த முடுதுறையை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). இவர் பவானிசாகர் வனத்துறையில் வனக்காப்பாளராக பணி புரிந்து வந்தார்.
மகேந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பவானிசாகர் வனப்பகுதி போலி பள்ளம் என்ற பகுதிக்கு சென்றார்.
அப்போது மரங்களின் இடையே இருந்து ஒற்றை யானை பிளிறிய படி அங்கு வந்தது. இடை கண்ட அவர்கள் ஆளுக்கொருபக்கம் தப்பிக்க ஓடினார்கள்.
இதில் அந்த யானையிடம் மகேந்திரன் சிக்கி கொண்டார். ஆவேசத்துடன் காணப்பட்ட அந்த யானை அவரை துதிக்கையால் தூக்கி கீழே போட்டு மிதித்தது. இதில் வனக்காப்பாளர் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். பவானிசாகர் போலீசாரும் வந்து மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யபட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு காவலர்களும் கண்ணீர் சிந்தினர்.
யானை மிதித்து பலியான வனக்காப்பாளர் மகேந்திரனுக்கு வெண்ணிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.