3 ஆண்டுகளாக தேர்தலை நடத்தாதது ஏன்? அ.தி.மு.க.வினரிடம் கேள்வி கேளுங்கள்- ப.சிதம்பரம் பேச்சு
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்தில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. கடந்த 3 ஆண்டுகளாக இந்த தேர்தலை நடத்தவில்லை. அவர்களுக்கு தேவை உள்ளாட்சி பிரதிநிதிகள் அல்ல. தனி அலுவலர்கள்தான். அதனால்தான் காலம் கடத்தி உள்ளனர்.
தற்போது கூட அவர்களுக்கு தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை. நீதிமன்றத்தின் கட்டாயத் திற்காக தேர்தலை நடத்துகின்றனர். இந்த தேர்தலில் மிகுந்த கவனத்தோடு வாக்களிக்க வேண்டும்.
பிரசாரத்திற்கு வரும் அ.தி.மு.க.வினரிடம் ஏன் 3 ஆண்டுகளாக தேர்தலை நடத்தவில்லை என கேள்வி கேளுங்கள். நம்மோடு இதே பகுதியில் வசிப்பவர், நாம் அருந்தும் தண்ணீரை அருந்துபவர், நாம் அழைத்தால் ஓடிவரும் நம்மவர்களுக்கு நாம் வாக்களிக்க வேண்டும்.
மெத்த படித்தவர்கள் சட்ட மன்றம் நாடாளுமன்றத்தில் முழங்கட்டும். ஆனால் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முழங்க தேவையில்லை. நம்மில் ஒருவராக இருந்து நமக்கு தேவையானவைகளை செய்வதுதான் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறுபவர் வேலையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. துரைராஜ், சங்கராபுரம் முன்னாள் தலைவர் மாங்குடி, தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.