செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவருடன் பைக்கில் சென்றபோது பஸ் மோதி பெண் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவருடன் பைக்கில் சென்றபோது பஸ் மோதி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படப்பை:
வாலாஜாபாத் அடுத்த தென்னேரி அகரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி பெருந்தேவி (வயது 39).
கணவன்-மனைவி இருவரும் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூரில் உள்ள மகன் வீட்டுக்கு செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
ஓரகடம் அடுத்த தெரசாபுரம் அருகே செல்லும்போது பின்னால் வந்த தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த பெருந்தேவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த செந்தில்வேலை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.