செய்திகள்
சட்ட நகலை எரித்தவர்களை போலீசார் தடுத்த காட்சி.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு- ஈரோட்டில் சட்ட நகலை எரித்த 35 பேர் கைது

Published On 2019-12-11 10:30 GMT   |   Update On 2019-12-11 10:30 GMT
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் சட்ட நகலை எரித்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோட்டில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அருகே போராட்டம் நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திரண்டனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் நிர்வாகிகள் ஒன்று திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த குடியுரிமை திருத்தம் தொடர்பான சட்ட நகலை திடீரென எரித்தனர்.

இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜீ தலைமையிலான போலீசார் நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். 9 பெண்கள் உள்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இரவில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் போலீசார் இன்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் எங்கேயாவது இதே போல் போராட்டம் நடைபெற்றால் உடனடியாக அவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News